திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.31 திருமகேந்திரப்பள்ளி பண் - கொல்லி |
திரைதரு பவளமுஞ் சீர்திகழ் வயிரமுங்
கரைதரும் அகிலொடு கனவளை புகுதரும்
வரைவிலால் எயிலெய்த மயேந்திரப் பள்ளியுள்
அரவரை அழகனை அடியிணை பணிமினே.
|
1 |
கொண்டல்சேர் கோபுரங் கோலமார் மாளிகை
கண்டலுங் கைதையுங் கமலமார் வாவியும்
வண்டுலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியிற்
செண்டுசேர் விடையினான் திருந்தடி பணிமினே.
|
2 |
கோங்கிள வேங்கையுங் கொழுமலர்ப் புன்னையுந்
தாங்குதேன் கொன்றையுந் தகுமலர்க் குரவமு
மாங்கரும் பும்வயல் மயேந்திரப் பள்ளியுள்
ஆங்கிருந் தவன்கழ லடியிணை பணிமினே.
|
3 |
வங்கமார் சேணுணர் வருகுறி யான்மிகு
சங்கமார் ஒலிஅகில் தருபுகை கமழ்தரும்
மங்கையோர் பங்கினன் மயேந்திரப் பள்ளியுள்
எங்கள்நா யகன்றன திணையடி பணிமினே.
|
4 |
நித்திலத் தொகைபல நிரைதரு மலரெனச்
சித்திரப் புணரிசேர்த் திடத்திகழ்ந் திருந்தவன்
மைத்திகழ் கண்டன்நன் மயேந்திரப் பள்ளியுள்
கைத்தல மழுவனைக் கண்டடி பணிமினே.
|
5 |
சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும்
இந்திரன் வழிபட இருந்தஎம் மிறையவன்
மந்திர மறைவளர் மயேந்திரப் பள்ளியுள்
அந்தமில் அழகனை அடிபணிந் துய்ம்மினே.
|
6 |
சடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபட
நடம்நவில் புரிவினன் நறவணி மலரொடு
படர்சடை மதியினன் மயேந்திரப் பள்ளியுள்
அடல்விடை யுடையவன் அடிபணிந் துய்ம்மினே.
|
7 |
சிரமொரு பதுமுடைச் செருவலி யரக்கனைக்
கரமிரு பதுமிறக் கனவரை யடர்த்தவன்
மரவமர் பூம்பொழில் மயேந்திரப் பள்ளியுள்
அரவமர் சடையனை அடிபணிந் துய்ம்மினே.
|
8 |
நாகணைத் துயில்பவன் நலமிகு மலரவன்
ஆகணைந் தவர்கழல் அணையவும் பெறுகிலர்
மாகணைந் தலர்பொழில் மயேந்திரப் பள்ளியுள்
யோகணைந் தவன்கழல் உணர்ந்திருந் துய்ம்மினே.
|
9 |
உடைதுறந் தவர்களும் உடைதுவர் உடையரும்
படுபழி யுடையவர் பகர்வன விடுமின்நீர்
மடைவளர் வயலணி மயேந்திரப் பள்ளியுள்
இடமுடை ஈசனை இணையடி பணிமினே.
|
10 |
வம்புலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியுள்
நம்பனார் கழலடி ஞானசம் பந்தன்சொல்
நம்பர மிதுவென நாவினால் நவில்பவர்
உம்பரார் எதிர்கொள உயர்பதி அணைவரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.109 திருக்கயிலாயமும் - திருஆனைக்காவும், திருமயேந்திரமும் - திருஆரூரும் - கூடச்சதுக்கம் பண் - பழம்பஞ்சுரம் |
மண்ணது வுண்டரி மலரோன்காணா
வெண்ணாவல் விரும்பும யேந்திரருங்
கண்ணது வோங்கிய கயிலையாரும்
அண்ணல்ஆ ரூராதி யானைக்காவே.
|
1 |
வந்துமா லயனவர் காண்பரியார்
வெந்தவெண் ணீறணி மயேந்திரருங்
கந்தவார் சடையுடைக் கயிலையாரும்
அந்தன்ஆ ரூராதி யானைக்காவே.
|
2 |
மாலயன் தேடிய மயேந்திரருங்
காலனை உயிர்கொண்ட கயிலையாரும்
வேலைய தோங்கும்வெண் ணாவலாரும்
ஆலைஆ ரூராதி யானைக்காவே.
|
3 |
கருடனை யேறரி அயனோர்காணார்
வெருள்விடை யேறிய மயேந்திரருங்
கருடரு கண்டத்தெம் கயிலையாரும்
அருளன்ஆ ரூராதி யானைக்காவே.
|
4 |
மதுசூதனன் நான்முகன் வணங்கரியார்
மதியது சொல்லிய மயேந்திரருங்
கதிர்முலை புல்கிய கயிலையாரும்
அதியன்ஆ ரூராதி யானைக்காவே.
|
5 |
சக்கரம் வேண்டுமால் பிரமன்காணா
மிக்கவர் கயிலை மயேந்திரருங்
தக்கனைத் தலையரி தழலுருவர்
அக்கணி யவராரூர் யானைக்காவே.
|
6 |
கண்ணனும் நான்முகன் காண்பரியார்
வெண்ணாவல் விரும்பு மயேந்திரருங்
கண்ணப்பர்க் கருள்செய்த கயிலையெங்கள்
அண்ணல்ஆ ரூராதி யானைக்காவே.
|
7 |
கடல்வண்ணன் நான்முகன் காண்பரியார்
தடவரை யரக்கனைத தலைநெரித்தார்
விடமது வுண்டவெம் மயேந்திரரும்
அடல்விடை யாரூராதி யானைக்காவே.
|
8 |
ஆதிமால் அயனவர் காண்பரியார்
வேதங்கள் துதிசெயும் மயேந்திரருங்
காதிலொர் குழையுடைக் கயிலையாரும்
ஆதிஆ ரூரெந்தை யானைக்காவே.
|
9 |
அறிவில் அமண்புத்தர் அறிவுகொள்ளேல்
வெறியமான் கரத்தாரூர் மயேந்திரரும்
மறிகட லோன்அயன் தேடத்தானும்
அறிவரு கயிலையோன் ஆனைக்காவே.
|
10 |
ஏனமா லயனவர் காண்பரியார்
கானமார் கயிலைநன் மயேந்திரரும்
ஆனஆ ரூராதி யானைக்காவை
ஞானசம் பந்தன் தமிழ்சொல்லுமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |